Banner
You are here: Home Vyakyanam Ramanusa Nootrandhadhi Ramanusa Nootrandadhi - 1

Tue

04

Aug

2009

Ramanusa Nootrandadhi - 1

email print PDF
இராமாநுச நூற்றந்தாதி - 1

பூமன்னுமாது பொருந்திய மார்பன்* புகழ்மலிந்த
பாமன்னுமாற னடிபணிந் துய்ந்தவன்* பல்கலையோர்
தாம்மன்ன வந்த விராமாநுசன் சரணாரவிந்தம்
நாம்மன்னிவாழ* நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே.

உரையின் அவதாரிகை
ஸகல சாஸ்த்ரங்களுக்கும் ஸங்க்ரஹம் திருவஷ்டாக்ஷரம். அதனுடைய பரம தாத்பர்யமாயும், ஆழ்வார்களுடைய திவ்ய ப்ரபந்தங்களின் ஸாரார்த்தமாயும், ஸ்ரீமதுரகவிகளுடைய உக்தியாலும் அநுஷ்டாகத்தாலும் ப்ரகாசிதமாயும், நம் பூருவாசார்யார்களின் உபதேச பரம்பரையாலே ப்ராப்தமாயும், சேதநர்களனைவர்க்கும் இன்றியமையாத ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களின் நிஷ்க்ருஷ்ட வேஷமாயும், பரம ரஹஸ்யார்த்தமாயு மிருப்பது சரம பர்வ நிஷ்டை. அஃதிருக்கும்படியைத் திருவரங்கத்தமுதனார்க்கு எம்பெருமானார் தமது நிர்ஹேதுக க்ருபையினாலே கூரத்தாழ்வான் திருவடிகளிலே இவரை ஆச்ரயிப்பித்தருளி இவர் முகமாக உபதேசித்தருளினார்.  அங்கனம் உபதேச ப்ராப்தமான அந்தச் சீரிய பொருளை இவ்வமுதனார் தாம் அநவரத பாவநை பண்ணி எம்பெருமானார் திருவடிகளை இடைவிடாது ஸெவித்துக்கொண்டு போந்தராய் அவருடைய திருக்கல்யாண குணங்களைத் தமது பத்திப் பெருங்காதலுக்குப் போக்குவீடாகப் பேசி அநுபவித்தே தீரவேண்டும்படியான நிலமை தமக்கு உண்டானமையாலும், சரமபர்வநிஷ்டையே சீரியதென்கிற பரமார்த்தத்தச் சேதநர்கட்கு எளிதில் உணர்த்த வேணுமென்கிற க்ருபாமூலகமான கருத்தினாலும் தாம் எம்பெருமானாருடைய திவ்யகுண சேஷ்டிதாதிகளை ப்ரேமத்துக்குத் தகுதியாகப் பேசுகிற பாசுரங்களாலே அவருடைய வைபவங்களை அனனவர்க்கும் வெளியிடா நின்றுகொண்டு முன்பு ஆழ்வார் திருவடிகளுக்கே அற்றுத்தீர்ந்த மதுரகவிகள் தமது நிஷ்டையைக்கூறும் முகத்தாலும் பிறர்க்கு உபதேசிக்கும் முகத்தாலும் உஜ்ஜீவநத்துக்கு உபயுக்த்தமான அர்த்தத்தை லோகத்திலே வெளியிட்டருளினதுபோல, இவர் தாமும் அவ்வகைகளாலே ஆசார்யாபிமாநநிஷ்டர்க்கு அறிந்து கொள்ளத்தக்க அர்த்தங்களையெல்லாம் மிக்க சுருக்கமும் மிக்க விரிவுமின்றி நூற்றெட்டு பாசுரங்கள் கொண்ட இத்திவ்ய ப்ரபந்த முகத்தால் அருளிச்செய்கிறார்.

நெஞ்சே!
ஓ மனமே!
பூ மன்னு மாது தாமரைப்பூவில் பொருத்த முடையளாயிருந்த பிரட்டி
பொருந்திய மார்பன் (அப்பூவை விட்டு வந்து) பொருந்துகைக்குறுப்பான போக்யதையையுடைய திருமார்பையுடையனான பெருமாளுடைய
புகழ் மலில்ந்த பா திருக்கல்யாண குணங்கள் நிறைந்த தமிழ் பாசுரங்களிலே
மன்னு மாறன் ஊற்றமுடையவரான நம்மாழ்வாருடைய
அடி திருவடிகளை
பணிந்து ஆச்ரயித்து
உய்ந்தவன்
உஜ்ஜீவித்தவரும்
பல் கலையோர் தாம் மன்ன வந்த பலபல சஸ்திரங்களை ஓதின மஹான்கள் நிலைபெறும்படி (இவ்வுலகில்) வந்தவதரித்தவருமான
இராமாநுசன்
எம்பெருமானாருடைய
சரண அரவிந்தம் திருவடித் தாமரைகளை
நாம் மன்னி வாழ நாம் ஆச்ரயித்து வாழ்வதற்குறுப்பாக
அவன் நாமங்களே அவ்வெம்பெருமானாரது திருநாமங்களையே
சொல்லுவோம் ஸங்கீர்த்தநம் பண்ணுவோம்

தாமரைமலரிற் பிறந்த பெரிய பிராட்டியார் அப்பூவைவிட்டு “அகலகில்லேன் இறையும்” என்று வந்து மிக்க விருப்பத்துடன் வஸிக்கப்பெற்ற திருமார்பை யுடையனான திருமாலினது திவ்ய குணசேஷ்டிதங்களை நிறைத்துக்கொண்டிருக்கிற திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களை அருளிச்செய்த நம்மாழ்வாருடைய திருவடிகளைத்தொழுது ஸத்தை பெற்றவராயும், பலபல சாஸ்த்ரங்களைக்கற்றும் உஜ்ஜீவநோபாயத்தில் த்ருடாத்யவஸாயமின்றியே ஸம்சய விபர்யங்கள்கொண்டு தடுமாறுகின்றவர்களை ஒரு நிச்சயஞானத்திலே நிலைநிறுத்தி வாழ்விக்கவந் தவதரித்தவராயுமிருக்கிற எம்பெருமானாருடைய திருவடிகளை நாம் ஆச்ரயித்து உஜ்ஜீவிக்குமாறு அவருடைய திருநாமங்களை வாயாரப் பேசுவோமென்று தமது திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுகிறாராயிற்று;
பல்கலையோர் தாம்மன்ன = நாநா சாஸ்த்ரங்களைக்கற்று வல்லவர்களான ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலிய மஹான்கள் ப்ரதிஷ்டிதராகைக்காக என்றுமாம். எம்பெருமானாருடைய சரணாரவிந்த ப்ராப்திக்கு ஸாதகம் = அவருடைய திருநாமஸங்கீர்த்தநமேயாம் என்பது இப்பாசுரத்தில் வெளியாயிற்று.

<< Prev _________________________________________________________________________________________________________________________________________________  Next >>



Last Updated ( Tuesday, 04 August 2009 20:20 )